Pages

Thursday 22 September 2016

அகநானூறு Agananuru 279

தலைவன் தன் நெஞ்சுடன் பேசுகிறான்.

1
பொன்னின் அழகு திகழும் பெண்ணின் முலை முற்றத்தைக் கடந்து பொருளீட்டச் செல்லாதவர் நண்பர்கள் வறுமையில் வாடவும், உறவினர்கள் துன்பத்தில் உழலவும், பெண்ணின்பத்தில் ஒட்டிக்கொண்டிருக்காமல் பொருள் தேடியவர்கள் செல்வப் பெருக்குடன் வாழவும் ஒரே ஊரில் பார்த்துக்கொண்டு காலம் கடத்துவர்
2
இரவும் பகலும் இதே நினைவில் இருந்தேன். இந்த நினைவு என் நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்தது. எனவே, பொருள் தேடும் முயற்சி-மழையில் முனைந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஊர் ஊராக நடந்து இங்கே துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

நான் இல்லாத துன்பத்தில் அவள் அங்கு என்ன பாடு படுவாளோ?
3
காலையில் சீறியாழில் எழும் விளரிப் பண் ஒலி கேட்கும். 
பொங்கும் பூக்களை உண்ணும் குயிலின் குரல் கேட்கும். 
இந்த ஒலிகள் அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பும். 
என்னைப் பற்றிய நினைவில் அவள் இவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பாள். 
வருந்தும் நினைவோடு அன்னம் போல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பாள். 

இப்படி மேகம் போன்ற கூந்தலை உடைய என் மாயோள் இருப்பாளே என்னும் நினைவு என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
''நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர்'' என,       5
2
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை 10
3
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,            15
கையறு நெஞ்சினள், அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

மகர யாழ் மீட்டும் மங்கை
பாடல் - யாழ் இசை கேட்கிறாள் 

No comments:

Post a Comment