அவன் வருவான்; மணந்துகொள்வான் என்று தோழி தலைவியின் தாய்க்கும் செவிலிக்கும் தெரிவிக்கிறாள்
1
மகளிர் தோழியரிடன் சேர்ந்து கடலலையில் விளையாடுவர். பின்னர் உப்பு மேட்டில் ஏறி நின்றுகொண்டு கடலில் வரும் திமில் படகுகளை எண்ணிக்கொண்டு விளையாடுவர். இப்படி மகளிர் விளையாடும் துறைக்கு அந்தத் துறைவன் தலைவன். அவன் இவளுக்குச் செய்த கொடுமையை ஊர் அலராகத் தூற்றுகிறது.
2
சுழலும் கண் கொண்ட இவள் (என் தலைவி) அவனை விரும்பிப் பார்க்கவில்லை. அன்னையே! வாழ்க! இவளை நீ துன்புறுத்தாதே.
3
ஒரு நாள் அவன் வருவான். சோலையில் உயர்ந்த கிளையில் இருக்கும் நாரை பறந்தோடும்படி தேர் ஒலியுடன் வருவான். பொங்கும் ஊதைக்காற்று வீசினாலும் கடலோரமாக வருவான்.
4
கழியில் மேயும் சுறாமீன் தன்னைத் தாக்கியது என்று அவன் தேரோட்டி கழியின் அழகை அழித்தான். அதனால் நம் கழிநிலம் பயன்பாடு குன்றிக் கிடக்கிறது. (அவனும் இவளும் அழிக்கவில்லை) என்றாலும் அவன் வருவான்.
மணி அசையும் தேரில் வருவான். குதிரை பூட்டிய தேரில் வருவான். ஓசை அடங்கிக் கிடக்கும் கானல் (இழும் என்னும் கானல்) மணலில் குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டுத் திருமணத்துக்காகத் தங்குவான். அந்த மயக்கம் தரும் மாலைப் பொழுது இன்னும் வரவில்லை.
இவ்வாறு தோழி தாய்மார்களுக்குத் தலைவியின் நிலையைக் கூறி அறத்தொடு நிற்கிறாள்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, நெய்தல்
1
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி, எல் பட,
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
2
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; 5
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
3
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை 10
4
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, 15
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.
உலோச்சனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment