Pages

Sunday, 24 July 2016

நற்றிணை Natrinai 199

ஓங்கிய மணலை உடுத்திக்கொண்டிருக்கும் பனைமரம். அதன் விரிந்த மடல்களுக்கு இடையே கூடு. அந்தக் கூட்டில் இருக்கும் குருகு நள்ளிரவு யாமத்தில் உயவுக்குரல் (முட்டையிடும் துன்பக்குரல்) எடுக்கும். அப்படி அது குரல் கொடுக்கும்போதெல்லாம் உள்ளம் உருகுகிறேன். சேற்றில் (அள்ளல்) தள்ளாடுவது போல் உருகிக்கொண்டு ஏதோ இருக்கிறேன். 
தோழி! வாழ்க! 
வளைந்த திமிலில் ஏறி, உலகை வளைத்துக்கொண்டிருக்கும் கடலில் செல்லும் பரதவர் சுறா மீனைப் பிடிப்பர். அவர்களின் திமில்படகில இருக்கும் சுடர் விளக்கு காற்றில் அசைந்தாடும். அந்த ஒளியில் பரதவர் பிடித்த சுறா வானத்தில் இமைக்கும் விண்மீன் போல இமைக்கும். 
அப்படி இமைக்கும் துறையின் தலைவன் நம் துறைவன். அவன் என்னைக் கட்டித் தழுவினான். (மெய்தோய் முயக்கம்). அந்தத் தழுவுதல் இல்லாத காலத்தில் குருகின் குரல் கேட்டு உருகிக்கொண்டிருக்கிறேன். 
தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

கொடுந்திமில் | திமில் படகு

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி
வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர்
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே

வன்புறை எதிரழிந்தது
பேரி சாத்தனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment