Pages

Sunday, 24 July 2016

நற்றிணை Natrinai 198

யா மரம். ஓங்கி உயர்ந்த (சேயின் வரூஉம்) மரம். ஓமை மரம். மலைக்காட்டில் இவை மண்டிக் கிடக்கும் வழி. நேற்றைக்கு முதல்நாள் அந்த வழியில் சென்றுவிட்டாள். அவளை நினைக்கும்போது என் கண்ணில் நீர் கொட்டுகின்றது. அவளைத் தேடிக்கொண்டு நெடுந்தொலைவு வந்துவிட்டேன். இங்கே இருந்துகொண்டு அவளுடைய தந்தையின் ஊரைத் தொழுகின்றேன். அவள் அல்குல் மேட்டில் அரும்பும் நுண்ணிய பல திதலைப் புள்ளிகளை உடையவள். வெள்ளை வெளேர் என்ற பற்களைக் கொண்டவள். கழுத்திலே மாலை அணிந்திருப்பாள். கைவளையல்கள் சிலவாக இருக்கும். கூந்தல் பலவாகப் பல்கிக் கிடக்கும். அவளைப் பெற்ற வயிறு இதுதான். அவள் தந்தை எருதின் அணல் போன்று வலிமை (முன்பு) மிக்கவன். கையில் வலிமை மிக்க வில்லை வைத்திருப்பான். எய்யாமல் வைத்துக்கொண்டிருப்பான். கொடை வழங்கி மகிழ்ச்சி அடைவான். (வண் மகிழ்) செல்லும் மகளைப் பார்த்தேன் என்று சொல்பவர்களே! உங்கள் பெயர் சிறக்கட்டும். ஓடிப்போன மகளைத் தேடிக்கொண்டு வரும் தாய், மகளைக் கண்டேன் என்று சொன்னவர்களிடம் இப்படிச் சொல்லிப் புலம்புகிறாள்.    
 
மை அணல் எருத்து
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – பாலை

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை
தன் ஊர் இடவயின் தொழுவேன் நுண் பல்
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த்
தந்தைதன் ஊர் இதுவே
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே

பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது
கயமனார் பாடியது

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment