Pages

Saturday, 23 July 2016

நற்றிணை Natrinai 194

அம்ம! தோழி! வாழி! இதைக் கேள். 
அகன்ற வாய் கொண்ட கன்றுகளை உடைய பெண்யானையை, உயர்ந்த கொம்புகளை உடைய ஆண்யானை தன் நீண்ட கைகளால் அரவணைத்து (தினை வயலில் மேயாமல்) அழைத்துச் சென்றுவிட்டது. 
கல்லின் மேல் கட்டப்பட்டுள்ள இதணப்பந்தல் தனிமையில் கிடக்கும்படி விட்டுவிட்டு நாம் போய்விட்டோம். 
மந்திக் குரங்குகளுக்கும் தெரியாத மரமடர்ந்த காட்டுப் பகுதியில் குன்ற நாடனோடு விளையாடிக்கொண்டிருந்தோம். 
இரும்பு அறுவாளால் அறுக்க இருந்த தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்லாமல் கிளிகள் இருந்தன. 
அந்த யானைக்கும் கிளிகளுக்கும் நாம் ஏதாவது விருந்து கொடுக்கவேண்டுமே. என்ன விருந்து கொடுக்கலாம்? 
தலைவியும் தோழியும் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர்.  

கிளிகள்
 தினைக்கதிர்களை
மேயாமல் இருந்தனவாம்
 பாடல்

கிளிகள் வயலில் மேய்தல்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

அம்ம வாழி தோழி கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர்த் தடக் கை
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசைத்
தனி நிலை இதணம் புலம்பப் போகி
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை
குன்ற வெற்பனொடு நாம் விளையாட
இரும்பு கவர்கொண்ட ஏனற்
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது
மதுரை மருதன் இளநாகனார் பாடியது

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment