Pages

Monday, 11 July 2016

நற்றிணை Natrinai 160

செம் பொறித் திரு நுதல்
அறம், நட்பு, நாணம் ஆகியவற்றைச் செல்வமாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும், அறத்தின் பயன், நட்பின் பண்பு, நாணத்தின் பெருமை ஆகியவற்றை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உன்னைக் காட்டிலும் நான் நன்றாக அறிவேன். எப்போது? இவள் கண்களைக் காண்பதற்கு முன்பு. இப்போது அவை என்னிடமிருந்து பறிபோய்விட்டன – இப்படித் தலைவன் தன் பாங்கனிடம் (அணுக்கத் தோழன்) கூறுகிறான்.
இவள்
’கம்’ என எதிர்ந்த தித்தி
ஏர் இள வன முலை
உடலில் தெளித்துவிட்டது போன்ற அழகிய நுண்ணிய சுணங்கு மடிப்புகள்
ஐந்து பகுதியாக வகுத்துச் சீவி முடித்த கூந்தல்
சிவப்புக் குங்குமப் பொட்டு வைத்த நெற்றி
பின்னலில் குவளை மலர். சுனையில் பூத்துத் தேனொழுகும் குவளை மலர்.
அரித்து மதமதக்கும் கண்ணின் பார்வை.
இவற்றைக் காண்பதற்கு முன்பு என்னிடம் இருந்த நல்ல பண்புகள் இப்போது இல்லை.
 
தித்தி
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்
ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறித்
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே

நயன் – பயன், நண்பு – பண்பு, நாண் – பாடு என நிரல்நிறையாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மன் – ஒழிந்து போயிற்றே என்னும் பொருளை உணர்த்தும் இடைச்சொல்
முதுநீர் இலஞ்சி – தேங்கிய நீருள்ள சுனை
கம் – மேனி மணத்தைக் குறிக்கும் ஒலிக்குறிப்பு.
சுணங்கு = உடலுறுப்பு மடிப்புகள்

கழற்று எதிர்மறை
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment