Pages

Sunday, 17 July 2016

களவழி நாற்பது பாடல் KalaVali 40 poem

களவழி நாற்பது
களம் என்பது இங்குப் போர்க்களத்தைக் குறிக்கும்.
புனல்நாடன் என்று போற்றப்பட்டுள்ள சோழ வேந்தனின்
போர்க்களம் பற்றி இதன் பாடல்கள் கூறுகின்றன.
வெண்பா யாப்பினால் அமைந்த பாடல்களின் தொகுப்பாக இந்த நூல் உள்ளமையால் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பகுப்பில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
இதனைப் பாடியவர் பொய்கையார்.
போர்க்களம்
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து,
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல்
துப்புத் துகளின் கெழூஉம் புனல் நாடன்
தப்பியார் அட்ட களத்து.     1

ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப்
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி,
கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ்
நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து. 2

ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து. 3

உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப்
பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில்
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற செங் கண் மால்
புல்லாரை அட்ட களத்து.    4

தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த; சிரல் வாய செங் கண் மால்
தப்பியார் அட்ட களத்து.     5

நால் நால் திசையும் பிணம் பிறங்க, யானை
அடுக்குபு பெற்றிக் கிடந்த இடித்து உரறி,
அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும்
பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண்
ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன்
வேந்தரை அட்ட களத்து.    6

அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி,
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே செங் கண்
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து.   7

யானைமேல் யானை நெரிதர, ஆனாது
கண் நேர் கடுங் கணை மெய்ம் மாய்ப்ப, எவ்வாயும்
எண்ண அருங் குன்றில் குரீஇஇனம் போன்றவே
பண் ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.   8

மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
கால் ஆசோடு அற்ற கழற் கால், இருங்கடலுள்
நீலச் சுறாப் பிறழ்வ போன்ற புனல் நாடன்
நேராரை அட்ட களத்து.     9

பல் கணை எவ் வாயும் பாய்தலின் செல்கலாது
ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின்
செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும் புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.   10

கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து,
கண் காணா யானை உதைப்ப, இழுமென
மங்குல் மழையின் அதிரும் அதிராப் போர்ச்
செங் கண் மால் அட்ட களத்து.   11

ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம்
தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப்
பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே
காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக்
கூடாரை அட்ட களத்து.     12

நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானைக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின்
சேய் பொருது அட்ட களத்து. 13

கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க,
பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய
ஒண் செங் குருதி உமிழும் புனல் நாடன்
கொங்கரை அட்ட களத்து.   14

கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும்
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன்
வினை படு பள்ளியின் தோன்றுமே செங் கண்
சின மால் பொருத களத்து.  15

பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து.    16

ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி,
தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே
போர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து. 17

நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும்
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய்
உடற்றியார் அட்ட களத்து.  18

இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி,
கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து,
முக் கோட்ட போன்ற, களிறு எல்லாம் நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து.   19

இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை
குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச்
சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற புனல் நாடன்
நேராரை அட்ட களத்து.     20

இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து,
கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய்,
தொல் வலியின் தீரா, துளங்கினவாய், மெல்ல
நிலம் கால் கவவு மலை போன்ற செங் கண்
சின மால் பொருத களத்து.  21

இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல்
ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே
கூடாரை அட்ட களத்து.     22

எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து
நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு,
செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே
கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன்
செற்றாரை அட்ட களத்து.   23

திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.   24

மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.    25

எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும்
செவ் வாய் உவணத்தின் தோன்றும் புனல் நாடன்
தெவ்வாரை அட்ட களத்து.  26

செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.         27

ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும் புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.   28

கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,
வீற்று வீற்று ஓடும் மயல் இனம்போல், நால் திசையும்
கேளிர் இழந்தார் அலமருப செங் கண்
சின மால் பொருத களத்து.  29

மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல்,
தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்
மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால்
அடங்காரை அட்ட களத்து.  30

ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து.   31

மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த
பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து.  32

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம்,
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே
கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.   33

இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க
குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும் அடர் பைம் பூண்
சேய் பொருது அட்ட களத்து. 34

செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை
ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் மல்கிக்
கரை கொன்று இழிதரும் காவிரி நாடன்
உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு
அரசுஉவா வீழ்ந்த களத்து.   35

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்,
மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்,
ஆ உதை காளாம்பி போன்ற, புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.    36

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.   37

பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின்,
பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன்
துன்னாரை அட்ட களத்து.   38

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.  39

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து. 40

வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.     41

மிகைப் பாடல்

படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த
திங்களில் தோன்றும் முயல்போலும் செம்பியன்
செங் கண் சிவந்த களத்து.  


களவழி நாற்பது முற்றும்

No comments:

Post a Comment