Pages

Wednesday, 8 June 2016

அகநானூறு Agananuru 118

கிளி கடி பாடல்


பகலில் வரின் ஊர் பழி தூற்றுமே என அஞ்சுகிறாள். இரவில் வரின் நீ வரும் வழியின் இருக்கும் துன்பத்தை எண்ணி அஞ்சுகிறாள். உன் காதல் கொடை இல்லாமல் இவளால் இருக்க முடியாது. எனவே மணந்துகொள்க – என்று தோழி தலைவனை அறிவுறுத்துகிறாள்.

1
ஒலிக்கும் வெண்ணிற அருவி விளங்கும் மலைப்பிளவில் வருகிறாய். தேன் மணம் கமழும் வேங்கைப்பூக் கொத்துகளைச் சூடிக்கொண்டு வருகிறாய். முருகன் பெண்களோடு சேர்ந்து தொண்டகப்பறை முழக்கிக்கொண்டு சிறுகுடித் தெருவில் ஆடுவான். அப்படி ஆடும் முருகனுக்கு ஒப்பானவன் நீ.
2
வேட்டை நாய் பின்தொடர நீ பகலில் வந்தால் ஊர் முணுமுணுக்கும். அதற்காக அஞ்சுகிறோம். தன் பெண்யானை, கன்றுகள் ஆகியவற்றோடு ஆண்யானை வரும்போது புலி தாக்கும். அந்தத் தாக்குதலில் தப்பிப் பிழைக்கும் யானைக்கூட்டமும் புலியும் நடமாடும் வழியில் நள்ளிருளில் தன்னந்தனியே நீ வருவது, பகலில் வருவதைக் காட்டிலும் கொடியது. அதற்காகவும் அஞ்சுகிறோம்.  
3
இவள் என்ன ஆவாளோ? தினைப்புனத்துக்கு வந்து கிளியோட்டும் பாடலை இனி இவள் பாடமாட்டாள். (காரணம் தினை அறுவடை செய்தாயிற்று) அந்தக் குறியிடமும் இனி ஒத்துவராது. உன் இன்ப-உறவு இல்லாமல் இவளால் இருக்கமுடியாது. இனி, இவள் நிலைமை என்ன ஆகுமோ என வருந்துகிறேன்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,   5
2
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். 10
3
என் ஆகுவள்கொல் தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள்தான், நின் அளி அலது இலளே!

செறிப்பு அறிவுறீஇ, ''இரவும் பகலும் வாரல்'' என்று வரைவு கடாஅயது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
 
மேலை நாட்டு வேட்டைக்காரன்

No comments:

Post a Comment