உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. 1 (2899)
மேலும் உயரமுடியாதபடி உயர்ந்த நலம் கொண்டவன் எவன், ஐயம் தோன்றாதபடி அறிவு-நலத்தை அளித்தவன் எவன், அயர்வு-உறக்கம் இல்லாமல் வாழும் அமரர்களின் தலைவன் எவன், - துயரம் போக்கும் அவனது சுடரும் திருவடிகளைத் தொழுதேன். மனத்தால் தொழுதேன்.
One, who has the top of welfare, wisdom of doubtless and rules as the king of Heavenly Beings, is He whom I worship in my mind.
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், எனனுயிர், மிகுநரை யிலனே. 2 (2900)
அறிவால் உருவான மனம், பிறவி-ஊழால் உருவான அகம், இரண்டிலும் கழியவேண்டிய மலத்தை நீக்கி, மனன் அகம் என்னும் மலர்களில் அவன் எழுந்தருள்கிறான். ஆனால், என் மனம், அதன் உணர்வு ஆகிய அளவிலோ, மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறி அளவிலோ, இன்ன பிற உணர்விலோ, முழுமையான நலத்திலோ அவன் தெரிவதில்லை. (துன்பப்படும்போதுதான் அவன் தெரிகிறான்) இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அவனுக்கு எதுவும் இல்லை. என் உயிரிலும் இருக்கிறான். மிக்க பிறரிடமும் இருக்கிறான். அனைவரிடமும் இல்லாமலும் இருக்கிளான்.
He is blooming in the flower of knowledge and thought. But he will not appear either in mind or sensory organs or happiness. (He will appear in difficulties only). He has neither future nor present nor past. But he is in all moving times.
இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 3 (2901)
இதுவாக அவன் இல்லை, இதுவாக அவன் இருக்கிறான், - என்று நினைக்க முடியவில்லை. நிலத்திலும் விசும்பிலும், உருவமாகவும், அருவமாகவும் இருக்கிறான். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் புலன்களிலும் இருக்கிறான். அந்தப் புலன்களுக்குத் தென்படாதவனாகவ்வும் இருக்கிறான். ஆனால் அவற்றில் நீங்காமல் இருக்கிறான். எங்கும் பரந்து கிடக்கும் பரந்தாமன் அவன். பரந்துகிடக்கும் நலம் பெற்றிருக்கும் அந்த ஒருவனை நண்பனாக்கிக்கொள்ள நாம் செல்லுகின்றோம்.
We can’t think “it is he and it is not he”. He is the matter of all from earth to heaven. Matter and energy, he is. The senses of organs, he is. Even though, he is apart from sensations. I approach him to be with him.
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 4 (2902)
நாம் அவனாக அவன் நிற்கின்றான். அவன், இவன், உவன் – அவள், இவள், உவள், எவள் - தாம், இவர், அவர், உவர் – அது, இது, உது, எது – வீயும், அவை, இவை, உவை, நலமானவை, தீங்கானவை ஆகும் அவை எவையாகவும் நின்றவர் அவர்.
He is within us. That man, this man and the man appearing in a distance – that maid, this maid and the maid appearing in a distance – we, this men and that men – it, this and that – those things, these things and things at a sight decaying – good and evils – all of these, he is.
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே. 5 (2903)
அவரவர் தமது தமது அறிவு அறிந்த, அறிகின்ற, அறியும் வகைப்பாட்டுக்கு ஏற்ப, அவரவர் இறையவர் எனக் கண்டு இறையவர் எனக் கண்டு இறைவன் திருவடியை அடைகின்றனர். அவரவர் இறையவர் யாராயினும் குறைவிலர். அந்த இறையவர் அவரவர் விதிப்படி அவர்களுக்கு அமைந்தவர்கள்.
Everybody attains ‘He’ as their knowledge reads. ‘He’ whom they attain is equal to other’s attained. Their destiny makes the to their corner.
நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்*
என்றுமோரியல்வினர் எனநினைவரியவர்*
என்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே. 6 (2904)
நிற்கின்றார், அமர்ந்திருக்கின்றார், படுத்திருக்கின்றார், திரிந்துகொண்டிருக்கிறார், - நிற்கவில்லை, இருக்கவில்லை, கிடக்கவில்லை, திரியவில்லை – என்று ஓர் இயல்புள்ளவராக அவரை நினைக்கக்கூட முடியவில்லை. ஆனால் என்றும் ஓர் இயல்போடு நிற்கின்றார். அது விரும்பத் தக்க திடம் (வலிமைத்திறம்).
We cannot think whether he is standing, sitting, lying or moving, though he is in these all. That is his nature of almighty.
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 7 (2905)
திடப் பொருளான விசும்பு, எரி(தீ), வளி(காற்று), நீர், நிலம் இவற்றின் மேலும், ஊடாகவும் படர்-பொருளாகவும், அவை முழுவதும் ஒன்றாகப் பரந்த நிலையிலும், அந்தப் பொருள்களாகவும், மற்ற எல்லாப் பொருள்களுமாகவும், உடலில் இயங்கும் உயிர் போல மறைந்து இயங்குகிறான். ஒளியும் இசையுமாக உண்டாகியிருக்கும் பண் அவன்.
He is in shy, heat, wind, water and soil in movements as the life moves in body hiding its sight and energy. He is rhythm.
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. 8 (2906)
சுரர் என்னும் தேவர்களாலும் அறிய முடியாதவன். விண் முதல் மண் வழியே அனைத்துமாகி முழுவதுமாய் விளங்குபவன். வரனும் அவன்தான். வரம் தருபவனும் அவன்தான். அனைத்தையும் உண்டு பரந்துள்ள பரன். அமரர்க்கு அறிவு வியப்பாக விளங்குபவன். முப்புரம் எரித்து, அறிவு இயந்து அரன்(சிவன்) என உலகை அழித்தும், அயன்(பிரமன்) என உலகை அமைத்தும் வீற்றிருப்பவன்.
Even the Heavenly-beings couldn’t read him. Heaven to earth, all, he is. He is mercy and merciful. (There are three places, upper, middle and lower as the time passes through past, present and past. They are three cities God Siva destroyed. Brahman is creating.). He is the God of decay and emerges.
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 9 (2907)
அவன் உளன் எனில் உளன். இங்குத் தெரியும் உருவங்கள் எல்லாம் அவன் உருவுகள். அவன் உளன்-அலன் எனில் அருவம் அவனது இந்த உருவுகள். உளன் என, இலன் என, - இவற்றைக் குணமுடைமையாகக் கொண்ட இல்லத்தில் உள்ளவன். இப்படி இரண்டு தகைமைப் பண்புகளைப் பெற்றவன். இரண்டு தகைமைப் பண்புகளினின்றும் ஒழியாதவனாகப் பரந்து கிடப்பவன்.
If we say, he is, he is. All that appears in our sight, he is. If we say, no, he is, that is his status of nil. These are his natures. That is his greatness, we are enjoying.
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டமிதென நிலவிசும் பொழிவற
கரந்த சிலிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 10 (2908)
பரந்து கிடக்கும் ஈரமுள்ள கடலில் உள்ள நீரிலெல்லாம் பரந்து கிடப்பவன். பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு அனைத்திலும் நீங்காமல், மறைந்திருக்கும் சில இடங்களிலும் நீங்காமல், இடத்தை அடைக்கும் பொருள்களிலெல்லாம் மறைந்துகொண்டும், விரிந்துகொண்டும், இவற்றை உண்ட கருமையானவனாக (கரன்) விளங்குபவன்.
He is in the sea-water with its chillness. He swallows spreading in earth and heaven. He is dark.
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. 11 (2909)
பாடல்களின் முதற்குறிப்பு
இதில் உள்ள 10 பாடல்களும் அந்தாதியாக வரும்படித் தொடுக்கப்பட்டுள்ளன. நூலில் இடைச்செருகல் நேராமல் இருக்கவும், மனப்பாடம் செய்பவர் நினைவுக்குக் கொண்டுவர எளிதா அமையும் பொருட்டும் இந்த அந்தாதி முறைமை கையாளப்பட்டது.
அடுத்த பத்தினை அந்தாதித்தொடை செய்யும் பொருட்டுப் பிற்கால அறிஞர் ஒருவர் பாடிச் சேர்த்த பாடல்
இந்தப் பத்து ’கரனே’ என்று முடிகிறது. அடுத்த பத்து ‘வீடு’ என்று தொடங்குகிறது. இரண்டேயும் அந்தாதியாக அமையும்-பொருட்டு இணைத்துவைக்கும் பாடல் இது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - நம்மாழ்வார் என்னும் குருகூர் வாழ் சடகோபன் பாடல்கள். – திருவாய்மொழி - திருமொழி 1 - பத்து 1 - கலிவிருத்தம் - பண் : முதிர்ந்த குறிஞ்சி - நாளம் : ஏழொத்து
No comments:
Post a Comment