Pages

Saturday, 30 April 2016

நற்றிணை Natrinai 106

அறிவு அஞர் உறுவி


தலைவன் தன் தேர்ப்பாகனிடம் தன் காதலி செய்ததைச் சொல்கிறான்.

பாக! உனக்குத் தெரியுமா? 
கடலலை மணலில் ஏறித் திரும்புகிறது. 
அந்தப் பகுதி மணக்கும்படி நண்டு வரிக்கோடு போட்டுக்கொண்டு ஓடி விளையாடிவிட்டு வளையில் நுழைந்துகொள்கிறது. 

இதனை பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் என் ஆசை நோயை வெளிப்படுத்தினேன். 

அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் தன் கையில் மணந்துகொண்டிருந்த ஞாழல் மலரைத் தடவி கையால் உதிர்த்துக்கொண்டிருந்தாள். 

அந்த மடப்பெண் அறிவு மயங்கி நின்றாள். 
(இதன் பொருள் என்னவாக இருக்கும்?)

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 106 நெய்தல்

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் 
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள 
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது 
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு 
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப 
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் 
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி 
முறி திமிர்ந்து உதிர்த்த கையள் 
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான் தேர்ப்பாகற்குச்சொல்லியது
தொண்டைமான் இளந்திரையன் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

ஆடு வரி அலவன் | நண்டு
ஆடு வரி
நண்டு ஆடிய வரி 

No comments:

Post a Comment