Pages

Wednesday 22 October 2014

புறநானூறு 55 Purananuru 55

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்


சிவபொருமானின் முக்கண்ணில் 
நெற்றிக்கண் போல 
ஏனைய இருபெரு வேந்தரின் மேம்பட்டு விளங்கும் மாறனே!

யானை, குதிரை, தேர், மறவர் என 
நாற்படையுடன் சிறந்து விளங்கினாலும் 
அரசின் வெற்றி அறநெறியில் உள்ளது. 

எனவே 

நம்முடையவர் என்று அவரது குணத்தை ஏற்றுக்கொள்ளாமலும், 
பிறர் என்று அவரது குணத்தைக் கொன்று போடாமலும் 
ஞாயிறு போல் ஆண்மைத்திறமும், 
திங்கள் போல் குளுமைப் பண்பும், 
மழை போல் கொடைத்திறமும் 

கொண்டு இல்லோர் வறுமையைப் போக்கி நீடு வாழ்க. 

முருகன் குடிகொண்டுள்ள செந்தில் கடலோர 
மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் 
பல்லாண்டுக்காலம் வாழ்க.

பாடல்

ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,                              5
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;      10
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், 15
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
கடு வளி தொகுப்ப ஈண்டிய    20
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

திணை பாடாண் திணை
துறை செவியறிவுறூஉ.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை 
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
மணல்



No comments:

Post a Comment