Pages

Saturday, 23 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 290


290. நெய்தல்

''காமம் தாங்குமதி'' என்போர் தாம் அஃது
அறியலர் கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம் ஆயின்,
செறி துனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல் பொரு சிறு நுரை போல, (படம்)
மெல்ல மெல்ல இல்லாகுதுமே.

வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.

கல்பொருசிறுநுரையார். 
(பாடலில் உள்ள தொடரால் பெயர் பெற்ற புலவர்)

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

காம உணர்வைத் தாங்கிக்கொள் என்று சொல்பவர்கள் அதனை அறியாதவர்களா? அதனைத் தாங்கிக்கொள்ளும் வலிமை அவர்களுக்கு உண்டா? நான் என் காதலனைக் காணமுடியவில்லை. இந்த நிலையில் பெருவெள்ளம் கல்லில் மோதி எழும்பும் நுரை ஒருபுறம் மெல்ல மெல்லத் தோன்றிக்கொண்டும் மறுபுறம் மெல்ல மெல்ல மறைந்துகொண்டும் இருப்பது போல என் ஆத்திரத்தோடு கூடிய காமம் தோன்றுவதும் மறைவதுமாக உள்ளது.  

No comments:

Post a Comment