Pages

Sunday, 2 November 2014

புறநானூறு 69 Purananuru 69

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


பாண! 

உறையூர் மாடத்தில் உள்ள கிள்ளிவளவனிடம் சென்றால் 
அவன் வாயிலில் காத்திருக்க வேண்டியதில்லை. 
பொன்-தாமரை சூடாமல் திரும்பப் போவதும் இல்லை.

பாணன் 

கையில் கடப்பாடுடைய யாழ், 
பாதுகாப்போர் இல்லாமையால் உடலில் பசி, 
இடுப்பில் கிழிசலைத் தைத்த ஆடை, 
இவற்றை மறைக்கக் கூச்சத்தோடு நடக்கும் நடை, 
குறிக்கோள் இல்லாதவன் உடம்பு போல் ஏங்கித் தவிக்கும் உறவினர் 
ஆகியவற்றை உடையவன்.
உலகமெல்லாம் சுற்றி அலைந்த பின் 
என்னை வினவினால், சொல்கிறேன், கேள்.

மன்னர் பாசறையில் இருந்தபோது யானைகளைக் கொன்ற அவன் 
இப்போது உறையூர் மாடத்தில் இருக்கிறான்.

கிள்ளிவளவன் 

ஓங்கிய வேலையுடைய அவன் 
பகைநாட்டுக்குச் செல்லப்போகிறான். 
தீ எரிவது போன்ற அணிகலன் பூண்டுள்ளான். 

அவனிடம் நீ சென்றால் 
வாயிலில் காத்திருக்காமல் 
பொன்னால் செய்த தாமரையை உனக்கு அணிவிப்பான். 
வறுமையைப் போக்கிக்கொள்ளலாம்

பாடல்

கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்      5
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,     10
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்    15   
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
ஆடு வண்டு இமிராத் தாமரை            20
சூடாயாதல் அதனினும் இலையே.

திணை – பாடாண்;  
துறை - பாணாற்றுப்படை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 
ஆலத்தூர் கிழார் 
பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

பாணன்



No comments:

Post a Comment