Pages

Sunday, 5 October 2014

புறநானூறு 23 Purananuru 23

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்


நெடுஞ்செழியன் 
தலையாலங்கானப் போரில் 
வென்று அழித்த பகைவர் நாட்டின் 
அழிவைப் பற்றிக் 
கல்லாடனார் கூறும் பாடல் இது.

கொட்டகையில் (வெளிறு இல்லில்) கட்டப்பட்டிருப்பதை 
வெறுத்த யானை கலக்கிய நீர்த்துறை.

நெடுஞ்செழியனின் படை 
கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல, 
பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக 
வீசி எறிந்திருக்கும் நிலம்.

படை கோடாரியால் வெட்டிச் சாய்த்த காட்டரண்,
படை எரி ஊட்டிய நகர்ப் பகுதி,

இவற்றையெல்லாம் அந்த நாட்டு அரசர்கள் பார்த்து நாணி, 
நம்மால் நெருங்க முடியாத அந்தத் துணிவாளன் 
உலகம் நெளியக்கூடிய பெருபடையை நடத்தி 
இன்னும் வந்து இன்னது செய்வான் 
என நடுங்கும் நாட்டைக் கண்டு வந்தேன்.

ஆண்மான் புலிவாயில் பட்டதை எண்ணிப் 
பெண்மான் பூளாப் பூ நிறைந்த காட்டில் 
வேளைச் செடியின் வெள்ளைப் பூக்களைக் கறிக்கும் 
நாடாக இப்போது அவர்களின் நாடு உள்ளது.

பாடல்

'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்' என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.
  • திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
  • பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் 
  • கல்லாடனார் பாடியது.
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

கலை புலிப்பால்
பட்டது



No comments:

Post a Comment