காமம்
வெகுளி
மயக்கம்
ஆகிய இவை உயிரினங்களுக்கு உள்ள 3 குணங்கள். இந்தப் பண்புகளே மனிதன் அடையும் துன்பங்களுக்குக் காரணம். மனிதன் இவற்றை அடக்கி ஆளவேண்டும்.
இதனைத் திருக்குறள் "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்" என்று கூறுகிறது.
இந்த மூன்று குணங்களையும் கடந்து அவை இல்லாமல் இருப்பவனை நெஞ்சில் நிறுத்துவோம் என்று ஒட்டக்கூத்தரின் ‘உத்தரகாண்டம்’ கடவுள் வணக்கப் பாடல் குறிப்பிடுகிறது.
அந்தப் பாடல்
ஒன்றாய்ப் பலவாய் உளவாய் இலவாய் உரைப்போர்க்கு
அன்று ஆகி யாமாய் அரு உரு ஆகி மெய்மை
குன்றாத ஞானக் கொழுந்தாய்க் குணம் மூன்று இறந்து
நின்றான் யாவன் அவன் நீள் கழல் நெஞ்சின் வைப்பாம்.
கம்பன் பாட்டு
'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்; 'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;
'அன்றே' என்னின், அன்றே ஆம்; 'ஆமே' என்று உரைக்கின், ஆமே ஆம்;
'இன்றே' என்னின், இன்றே ஆம்; 'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!
இது கம்பன் பாடிய இராமாயணம் யுத்தகாண்டம் கடவுள் வணக்கப் பாடல்.
இந்தப் பாடலின் தாக்கத்தையும் ஒட்டக்கூத்தன் பாடலில் காணமுடிகிறது.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 325
No comments:
Post a Comment